கேள்விக் கணைகள்-தாய்ப்பால்

அனைவருக்கும் வணக்கம்!

இன்று என் நண்பருடன் ஒரு சின்ன விவாதம் செய்திட நேர்ந்தது. அர்த்தமுள்ள விவாதங்கள் புதிய சிந்தனைகளை கொடுக்கும் என்பது என் நம்பிக்கை. முதலில் அவரைப் பற்றியும் அவர் போன்ற மனிதர்கள் பற்றியும் ஒரு சிறிய அறிமுகம் செய்வது சரியாக இருக்கும்.
ஒரு நல்ல விஷயத்தை செய்ய முடியாதவர்கள், அதே நல்ல விஷயத்தை ஏற்கனவே சிறப்பாக செய்து கொண்டிருப்பவர்களை ஏளனம் செய்யகூடாது!
அப்படிப்பட்ட ஒரு மனிதர் தான் என் நண்பர். என்னை பார்த்த உடனே என் உணவு முறை பற்றியும் என் வாழ்கை முறை பற்றியும் குறை சொல்வதும், ஏதேனும் விதண்டாவாதம் செய்வதுமே அவரது தலையாய நோக்கம். என்னை போற்றுபவர் பலர் இருக்க என்னை தூற்றுபவரை ஏன் கண்டு கொள்ள வேண்டும் என்று விலகிப் போக நான் விரும்பவில்லை. TRUTH MUST TRIUMPH அல்லவா! நான் செய்யும் நல்ல விஷயங்களை இவர் போன்ற மனிதர்கள் காண மாட்டார்கள். மாறாக நான் செய்யாத அல்லது செய்ய முடியாத, மேலும் தெரியாமல் செய்த பிழைகள் போன்றவைகளே இவர்கள் கண்ணில் படும்.
உதாரணமாக,
  • நான் மிருக வதை செய்து வரும் பொருட்களை உபயோகப் படுத்த மாட்டேன் என்றால், அவர்களது கேள்வி மது, விஸ்கி  போன்றவற்றை அருந்துவாயா என்று இருக்கும்.
  • வன்முறை பிடிக்காது என்று நான் சொன்னால், இலங்கையில் வாழ்ந்தால் என்ன செய்வாய் என்று கேள்வி வரும்.
  • பால் சாப்பிடக்கூடாது என்று சொன்னால் தாய்ப்பால் குடிக்காமல் வளர்ந்தாயோ என்பார்கள்
  • உலகமே நனிசைவ உணவு முறைக்கு மாறிவிட்டால் நாளை காலை பிறக்கவிருக்கும் என் உறவினரின் குழந்தைக்கு வெஜிடபிள் பிரியாணி கொடுக்கலாமா என்றும் கேள்வி வரும்.
அதாவது அவர்கள் சாமர்த்தியமாய் என்னை கேள்வி கேட்டு மடக்குகிறார்களாம்.
மாற்றங்களை விதைத்து விட்டு நாம் அறுவடை செய்யக் காத்திருக்கும்போது சிலர் எதிர்காலத்தில் ஏற்கெனவே வாழ்ந்து விட்டு வந்தது போல கேள்விகள் கேட்பார்கள். 
இன்னும் நூறு வருடம் கழித்து ஆவின் கம்பெனி இருக்குமா?
50 வருடத்தில் விவசாயம் பொய்த்து விடுமாமே, அப்போது யாருக்கும் காய்கறி கிடைக்காது போனால் நீ என்ன செய்வாய் என்றெல்லாம் மிகவும் சாமர்த்தியமான கேள்விகள் கேட்டு மடக்கும் புத்திசாலிகள் நிறைந்த நாடல்லவா இது.  சரி விவாதத்தின் தலைப்புக்கு வருவோம்.அவரது கேள்வி இது தான்.

ஒருவேளை நான் நனிசைவ உணவு முறைக்கு மாறிவிட்டால் (மாறும் எண்ணமில்லை ) என் மனைவியும் மாறி விட்டால், எதிர்காலத்தில் எங்களுக்கு பிறக்கும் குழந்தையும் நனிசைவ உணவு முறையில் வளர்க்க நினைத்தால் (வாயில் வடை சுடுவது என்பார்களே, அதான் இது) அப்போது என் மனைவிக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால், நான் மருத்துவரிடம் போனால், அவர் குழந்தைக்கு பசும்பால் கொடுக்க அறிவுறுத்தினால் நான் என்ன செய்வேன். (அவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது இது தான் தொலை நோக்குப் பார்வை என்பது )

நான் நனிசைவ முறையை பின்பற்றுபவன் தான் என்றாலும், என்னிடம் இந்த அருமையான கேள்விக்கு உடனடி பதில் இல்லை. நான் மருத்துவன் அல்லன். எனவே எனக்கு  கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. எனினும் பதில் அளித்தால் அவரும் மாறிவிடுவார் என்று ஒரு சின்ன ஆசை... பதில் தேட முற்பட்டேன். அதற்கான பதில் இதோ...

கீழே இருப்பது இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்கும் முறைகள் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வு முடிவாகும்.

அதில் WEANED-என்பது முற்றிலும் தாய்ப்பால் மறுக்கப்பட்ட அல்லது தாய்ப்பால் தர இயலாமல் வேறு உணவை குழந்தைக்கு பழக்கப்படுத்தும் முறையை குறிக்கிறது. முதல் மாதம் முதல் 23 வாரங்கள் அதாவது 6 மாத காலம் வரை எடுக்கப்பட்ட ஆய்வில் 4-6% விழுக்காடு பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல் அல்லது விருப்பமில்லை, எனவே குழந்தைக்கு வேறு வகையான பால் அல்லது செறிவூட்டப்பட்ட உணவை அளிக்கிறார்கள் என்பது தெரியும். அறிய இங்கே சொடுக்கவும்.  70% குழந்தைகள் வெறும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படுகிறார்கள். இந்த 4-6% வகையறாவில் என் மனைவி இருந்தால் என்ன செய்வது என்பது நண்பரின்  கேள்வி.

உலக சுகாதார அமைப்பு ( WHO) ஆறு மாத காலத்திற்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்தது என பரிந்துரை செய்கிறது. மேலும், இரண்டு வயது வரை தாய்ப்பால் உடன் வேறு சில செறிவூட்டப்பட்ட உணவுகளையும் கொடுக்க பரிந்துரைக்கிறது. ஆனால் மேலை நாடுகளில் தாய்ப்பால் கொடுக்கும் வழக்கம் பெண்களிடம் படிப்படியாய் குறைந்து வருகிறது. இந்தியாவிலும் பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது வேப்பங்காயாய் கசக்கிறது என்பது உண்மை, மேலும் சில பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டினால் தாய்ப்பால் கொடுக்கும் தகுதி இல்லாமல் போகிறது.

இந்நிலையில், தாய்ப்பாலுக்கு இணையான சத்துள்ள அதே சமயம் மிருகத் தொடர்பு அல்லாத உணவு இருக்குமா என்ற கேள்வி மிகவும் ஆராய்ச்சிக்குரியது.



அறிக, தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு முதல் தர ஊட்டச்சத்தை தர வல்லது. தாய்ப்பாலுக்கு நிகர் எதுவும் இல்லை, பசும் பால் வெறும் சப்பைக் கட்டு மட்டுமே. தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்து தேவை அறிந்து சுரப்பதே தாய்ப்பால். கீழே கொடுக்கப்பட்டுள்ள மாற்றுவழிகள் தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை முற்றிலும் ஏற்படும் போது மட்டுமே பின்பற்றப்ப்பட வேண்டும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கின்றது. மேலும் மாற்று வழி முறைகள் அனைத்தும் நனிசைவ உணவு முறையை சார்ந்ததே.   விதண்டாவாதம் பேசுவதற்கு இது பதில் அல்ல!

இயற்கையாகவே தாய்ப்பால் கொடுக்க முடியாத பட்சத்தில் நாம் எடுக்கும் சிறந்த முடிவு வேறொரு ஆரோக்கியமான தாய்மை அடைந்த பெண்ணின் தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுப்பது தான். தவிர, பசும் பாலை பிறந்த குழந்தைக்கு கொடுப்பது குழந்தையின் குடலையும் செரிமான இயக்கத்தையும் சேதப்படுத்தும் வாய்ப்புகள் உண்டு.

இது மட்டுமல்லாமல் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் பால் (தேங்காய், சோயா, நிலக்கடலை மற்றும் செரிவூட்டப்பட்ட சோயா பால் போன்றவை) குழந்தைகளுக்கு உகந்ததாகவே இருக்கிறது.
அரிசியில் இருந்து பெறப்படும் பாலும் சில காலத்துக்கு உதவும், ஆனால் முற்றிலும் இணையான பால் கிடையாது. மிகக் குறைந்த கொழுப்பு சத்து கொண்டது அரிசி பால்.
ஆனாலும் எச்சரிக்கை தேவை. 2 வயதுக்கு மேல் எந்த குழந்தைக்கும் பால் தேவை இல்லை... குறிப்பாக வேறொரு விலங்கினத்தின் பால்.

தாய்ப்பால் வங்கிகளும் இந்தியாவில் இப்பொழுது வளர்ச்சியில் உள்ளன. மும்பை மாநகரில் தாய்ப்பால் வங்கி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அளவுக்கதிமாக சுரக்கும் தாய்ப்பால் விருப்பமுள்ளவர்களால் தானமளிக்கப்பட்டு இங்கே பாதுகாக்கப்படுகிறது. மனிதனுக்கு மனிதனே உதவி! இதில் பசுவையும் கன்றையும் பிரிக்க வேண்டியதில்லையே!

மீண்டும் எச்சரிக்கிறேன், தாய்ப்பால் மட்டுமே ஒரு குழந்தைக்கு மிக சிறந்த போஷாக்கை அளிக்கும். 6 மாத காலம் தொடர்ந்து தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தையே ஆரோக்கியமாக வளரும். அதிகபட்சம் 2 வருடம் தாய்ப்பால் கொடுப்பது சிறந்தது.

என் நண்பருக்கு, அவரைப் போன்ற மக்களுக்கு  என் தனிப்பட்ட கருத்து, எதிலுமே குறைகளையும் தவறுகளையும் மட்டுமே காணும் பழக்கத்தை விடுங்கள். எதிர்மறையான எண்ணங்களை விட்டொழியுங்கள். வெறும் 6 விழுக்காடு பெண்களுக்கு மட்டுமே தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல் உள்ளது. அதுவும் கூட முறையான மருத்துவப் பயிற்சியின் மூலம் சரி செய்து விடலாம். இங்கே காண்க. உங்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்யும் எண்ணமும், பிற உயிர்கள் மீது அக்கறையும் ஏற்படும் பட்சத்தில், நீங்கள் மேலும் மேலும் கற்றுணர முற்படுவீர்களே தவிர, விதண்டவாதமான கேள்விகளையும், எதிர்மறையான எண்ணங்களையும் முட்டாள் தனமான பேச்சுகளையும் கையில் எடுக்க மாட்டீர்கள். உங்கள் ஆரம்பக்கட்ட கேள்விகள் அனைத்திற்கும் என் தளத்தில் பதில் உள்ளது. ஆனால் கற்றுக்கொள்ள ஆர்வம் இன்றி படித்தால் பயன் இருக்காது.

அமைதியான உலகமே நம் அனைவரின் நோக்கமாக உள்ளது. தட்டில் விழும் இறைச்சித்துண்டு வன்முறையால் வரும்போது நாம் எப்படி அமைதியை எதிர்பார்க்க முடியும்?

கற்றுணருங்கள்/.

ஏதேனும் பிழையோ விமர்சனமோ இருந்தால் கமெண்ட் செய்யுங்கள். விரைவில் பதில் அளிக்கப்படும்.

நன்றி!










For my Well wisher's wellness...

நலம் விரும்பியின் நலனுக்காக...


அனைவருக்கும் வணக்கம்!

நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கல்லூரி, முடிந்தவுடன் பணி, பின்னர் குடும்ப சூழல்... இடைவெளிக்கு ஏகப்பட்ட காரணங்கள். எனினும் இதோ அடுத்த இடுகை.

என் பக்கத்து வீடு நண்பர் ஒருவர், நண்பர் என்பதை விட நலம் விரும்பி என்று கூட சொல்லலாம். எதையும் பல முறை யோசித்து செய்பவர். தீர்க்கமாக முடிவெடுப்பவர். ஆனால் அவர் அசைவ பிரியர். என்னுடைய நலம் விரும்புபவர், பிழை செய்வதை பார்த்துக் கொண்டு நான் எவ்வாறு சும்மா இருக்க முடியும். எனவே அவரிடம் நேரடியாகவே விசாரித்தேன், "அசைவம் இல்லாமல் உங்களால் ஆரோக்கியமாக இருக்க முடியுமே? இது அவசியம் என நீங்கள் கருதுகிறீர்களா?" என்று. அவர் சொன்ன பதில் என்னை மேலும் ஆழமாக சிந்திக்க வைத்தது. விவாதத்தின் சாரத்தை மட்டும் உரையாடல் வடிவில் இங்கே தருகிறேன்.

நண்பர்: நானும் என் வாழ்வில் பால் கூட அருந்தாமல், அசைவம் உண்ணாமல் இருந்திருக்கிறேன். ஆனால் எனக்கு அது சரிப்பட்டு வரவில்லை.

நான்:    எப்போது எதனால் நீங்கள் இந்த முடிவை எடுத்தீர்கள்? பின் எதனால் கட்டுபாட்டை கை விட்டீர்கள் ?

நண்பர்: சில வருடங்களுக்கு முன் நான் ஒரு ஞானி அல்லது துறவி ஒருவரின் மேல் கொண்ட பக்தியின் பேரில் அசைவம் பால் போன்றவற்றை உண்ணாமல் இருந்தேன். அவருக்கு ஏகப்பட்ட தொண்டர்கள், சிஷ்யர்கள் மற்றும் ஆசிரமங்கள் உண்டு. என் வாழ்வில் இருந்த கஷ்டங்களை நீக்கி விடுவார் என்று எண்ணி அவரது ஆசிரமத்தில் பணம் கட்டி உறுப்பினராய் சேர்ந்தேன். அவரை நேரில் கண்டதில்லை. ஆனால் அவர் வருவார், வந்து கொண்டிருக்கிறார் எனும் வாக்கை மட்டுமே நம்பி அங்கே இருந்த பலருள் நானும் ஒருவன். அவரது தரிசனமும் நிம்மதியும் கிடைக்க சில ஆசாரங்களை கடைபிடிக்க வேண்டியிருந்தது. அவற்றில் புலான் மறுத்தலும் ஒன்று. மேலும், அரை வயிறு மட்டுமே உண்ண வேண்டும், விடியும் முன் எழுந்து சுத்தம் பேண வேண்டும், என பல விஷயங்களை பின் பற்றினேன். ஆனால், நான் எதிர்பார்த்த அமைதியோ, நிம்மதியோ எனக்கு கிடைக்கவில்லை. மேலும், என் வாழ்வில் சிறு முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே நான் எதற்காக இவ்வளவு தியாகங்களை(!) செய்து என்னை வருத்திக் கொண்டு ஆசாரங்களை கடை பிடிக்க வேண்டும் என்று ஆசிரமத்தை விட்டு விலகினேன். ஆசிரமம் போலி என்பதை அறிந்தேன்.
இறைவன் என் பக்கம் என்பதில் நம்பினேன். உழைத்தேன். உழைக்கும் நேரத்தில் என்னால் அசைவம் உண்பதை தவிர்க்க முடியவில்லை. மிகவும் சோர்வாக உணர்ந்தேன். எனவே அசைவம் சாப்பிட ஆரம்பித்தேன்.

இங்கே உரையாடல் முடிகிறது.
இது போன்ற தடுமாற்றங்கள் பலரது வாழ்வில் வருவது இயல்பே! இதில் இவர் போன்ற தீர்க்கமானவர்களும் தடுமாறி விடுகிறார்கள் என்பது கசப்பான உண்மை! போலிகள் பெருகிப்போனது மையக்காரணம். ஆனால், இந்த தடுமாற்றத்திலும் ஒரு நல்ல விஷயம், புலான் மறுத்தல் பால் மறுத்தல் போன்ற ஆசாரங்களை இவர் சில காலம் கடைபிடித்திருக்கிறார். இங்கே இவர் ஒரு நல்ல வழக்கத்தை ஒரு முரணான குறிக்கோளுடன் ஏற்படுத்தியிருக்கிறார், என்பதை கவனிக்க வேண்டும்.

A Right Habit with a Wrong Attitude.

ஞானியின் தரிசனத்திற்காகவும், நிம்மதிக்காகவும், வீட்டை விரிவு படுத்த வேண்டியும், இவ்வழக்கத்தை அவர் மேற்கொண்டிருக்கிறார். குறிக்கோள்கள் பூர்த்தியாகாத பட்சத்தில் விரக்தியின் காரணமாக ஒரு நல்ல வழக்கத்தை கைவிட்டிருக்கிறார். இடைப்பட்ட நேரத்தில் அசைவம் உண்டால் மட்டுமே தெம்பாக வேலை செய்ய முடியும் இல்லையேல் சோர்ந்து விடுவோம், என்ற சுய படிப்பினையை கற்றுக் கொண்டு அசைவம் சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்.

இதே நிலை தான் எனக்கும் என்று கூறுபவர்களுக்கும், இந்த நிலையில் தற்போது உழன்று கொண்டிருப்பவர்களுக்கும், இனி இந்நிலை நேரக்கூடாது என நினைப்பவர்களுக்கும் இந்த இடுகையை அளிக்கிறேன். இதில் இரண்டு விஷயங்கள் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
முதல் விஷயத்துக்கு வருவோம். அறிவுரைகளே இந்த உலகில் இலவசமாகவும் அதிகமாகவும் கிடைக்கும் பொருளாகும். ஆனால், அதை ஒருவன் இலவசமாக அளிக்கும் போது மனம் அதை ஏற்க மறுக்கிறது. உதாரணத்திற்கு என்னையே சொல்லலாம். நான் அசைவம் சாப்பிடுவது அனாவசியம், ஆரோக்கியத்திற்கு கேடு என்று சொல்வதால் எனக்கு பணம் கிடைக்காது. ஆனாலும் அந்த ஆலோசனையை நான் தவறாமல் அனைவருக்கும் வழங்கி விடுவேன், இலவசமாக. யாரும் கவனிக்க மாட்டார்கள். ஆனால், ஒரு மருத்துவமனையில் பல்வேறு சோதனைகள் செய்து, பல ஆயிரங்கள் செலவு செய்தபின், கணிசமாக ஒரு தொகையை வாங்கிகக்  கொண்டு மருத்துவர் சொல்வார், தண்ணீர் அதிகம் குடியுங்கள், உப்பு சேர்க்க வேண்டாம், சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளுங்கள், அசைவம் கூடவே கூடாது. முட்டை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்(இது ஆறுதலுக்காக) ஆனால் மஞ்சள் கரு சேர்க்கக வேண்டாம், சுவையான உணவையே நினைத்துப பார்க்க முடியாதவாறு இன்னும் ஏதேதோ! ஆனால், மிருக வதை செய்து வரும் எந்த பொருட்களையும் சேர்க்காதீர்கள், ருசியாகவும் ஆரோக்கியமாகவும் உணவு உண்ணுங்கள், சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளுங்கள் என ஆரோக்கியமாக வாழ நான் இலவசமாக கூறும் ஆலோசனையை ஒருவரும் ஏற்க மாட்டார்கள் . காசு கொடுத்து வாங்கிய டாக்டரின் ஆலோசனைகள் பத்தியம் தவறாமல் கடைபிடிக்கப்படும். இது போலத்தான் சாமியார் மடங்களும் அங்கே கொடுக்கப்படும் ஆலோசனைகளும். வாங்கிய காசுக்கு ஏதேனும் நல்லதை சொல்ல வேண்டுமே என்று நாங்கள் இலவசமாக சொல்வதையே அவர்கள் சற்று தத்துவார்த்தமாக சொல்வார்கள். இதையெல்லாம் செய்தால் பகவான் உங்கள் முன் தோன்றுவார், வேண்டிய வரம் கிடைக்கும் என்று பூசி மெழுகுவார்கள். நாமும் Fact-u fact-u fact-u  என்று ஆமோதிப்போம். ஆனால் நிதர்சனமான உண்மை என்னவென்றால் இத்தகைய வழக்கங்களை பின்பற்றுவதனால் பகவன் தரிசனமோ, வரமோ கிடைக்காது... மாறாக ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், மற்றும் புண்ணியமும் கிடைக்கும். வேறென்ன வேண்டும். ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு,

Don't Blame Others for disappointing you, but blame yourself for expecting too much!

என்று. அதிகம் எதிர்பார்ப்பதே தவறு, என்பது இதன் அர்த்தம். எனவே ஒரு நல்ல வழக்கத்தை கடைபிடிக்கும் போது அதிகம் எதிர்பார்க்காமல், நிதர்சனத்தையே எதிர்பார்த்தால் பலன் நமக்கு சாதகமாக இருக்கும். அதே போல பணத்துக்காக கிடைக்கும் எந்தவொரு அறிவுரையும் ஆலோசனையும் நன்மைக்காக இராது.

இரண்டாவது விஷயம், அசைவம் உண்ணாதே என்று சொன்னவுடன் சிலர் காதுக்கு உணவு உண்ணாதே என்று கேட்கிறது போலும்... நம்மை அப்படி முறைத்துப் பார்க்கிறார்கள். அசைவ உணவை பகட்டாகவும் கௌரவமாகவும் நினைக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். ஒரு உயிரை வதைத்து உணவு படைக்க எந்த கடவுளும் விரும்புவதில்லை. அதே நேரம், அரை வயிறு சாப்பிட்டு பசியோடு தான் என்னை தரிசிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தமும் கடவுள் விதிக்கவில்லை. வயிறு புடைக்க உண்ணுங்கள். ஆனால், உண்ணும் உணவு இறைத்தன்மையுடதாய் இருக்கட்டும். அகிம்சை முறையில் உழைத்துப் பெற்றதாய் இருக்கட்டும். ருசியாக உண்ணுங்கள், ஆனால் ஆரோக்கியமாக உண்ணுங்கள். நம்மைப் போலவே கண் காது மூக்கு கொண்டு, நம்மை போலவே உணர்ச்சிகளை பெற்றுள்ள ஒரு உயிரை கொன்று நாம் உணவு உண்போமானால், நாம் எப்படி அமைதியையும் அன்பையும் விதைக்க முடியும்? அசைவம் உங்கள் உடலுக்கு தெம்பு கொடுக்காது. ஆறறிவு படைத்த உங்கள் உடலின் சோர்வையும் தெம்பையும்  ஐந்தறிவு கொண்ட ஒரு உயிரின் பிணம் தீர்மானிக்கிறதா என்ன? இல்லவே இல்லை, மனமே உங்கள் சோர்வுக்கு காரணம். மாமிசத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள ஈடுபாடே உங்கள் உடலின் தெம்பை போலியாய் ஏற்படுத்துகிறது. அதே ஈடுபாட்டை நீங்கள் உண்ணும் சைவ உணவில் வைத்தாலும் உங்களுக்கு தெம்பு வரும். மேலும், மாமிசம் உங்கள் உடலின் தெம்பை வெகுவாக குலைக்கும் என்பதே அறிவியல் உண்மை, உங்கள் மனம் மட்டுமே தெம்பாக உணரும் அன்றி உங்கள் உடல் உள்ளுக்குள்ளே குலைந்து கொண்டிருக்கும். இயற்கை உணவுகளான காய் கனிகள் உங்கள் உடலை சுத்தமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது. மாமிசம் உங்கள் மூளையை மந்தமாக்குகிறது!

இந்த ஆலோசனையும் இலவசம் தான். உங்களால் முடிந்த வரை பின்பற்றுங்கள், உங்கள் நலம் விரும்புவோருக்கு ஏதேனும் கைம்மாறு செய்ய விரும்பினால் அவர்களுக்கும் இதை கூறுங்கள். ஏனெனில், பணம் இந்த உலகை இயக்க கூடாது அல்லவா? அன்பினால் இயங்கும் உலகம் அமைதியாய் இயங்கும். அந்த அன்பு வட்டத்தில் வாயில்லா ஜீவன்களையும் சேர்த்துக் கொள்வது தவறல்லவே!

மாமிசக் கடை அருகே சென்றால் நான் மூக்கை பொத்துவேன். அலறல் சத்தம் கேட்டால் காதை மூடுவேன், ஆனால் என் நண்பர் அங்கேயே நின்று தோலை உரிக்கும் வரை பார்த்து, நிதானமாக வாங்கி சமைத்தும் சாப்பிடுவார். ஏனேன்றால், அந்த நாற்றமும், அந்த அலறலும் அவருக்கு பழகிப் போய் விட்டது.  தீய விஷயங்களே பழகிப் போகும்போது, நல்ல விஷயங்கள் பழகாதா என்ன?

 


எனவே, அன்பர்களே, இன்று முடிவெடுங்கள்... மிருக வதையை ஒழிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள், பெரிதாய் ஒன்றும் செய்ய வேண்டாம், உங்கள் தட்டில் சில மாற்றங்களை செய்யுங்கள். உங்கள் வயிறும், அடுப்பங்கரையும் பிணவறை அல்ல என்பதை கருத்தில் கொள்ளுங்கள். இறைவன் காட்சியளிப்பார் என்று நான் சொல்ல மாட்டேன், ஆனால், உங்களுள் இறைவன் உறைவதை உங்களால் உணர முடியும் என்பதை அடித்து சொல்லுவேன். ஆரோக்கியமான உடல் தானே கோவில்?

                                              மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,
                                                                            நன்றி,
                                                                      காதலுடன்,
                                                             ஜானெஹ் சங்கர்.