நனிசைவம்: விடுதியாளர்களுக்கான குறிப்புகள்_FOR HOSTELLERS

இந்த இடுகையின் ஆசிரியர்
அருண்,
முன்னாள் ஆராய்ச்சி மாணவர், Indian Institute of Science,சமபாவா அமைப்பின் பொருளாளர் (http://www.samabhava.org)



'த்துணையும் பேதமுறாது...' எனத் துவங்கும் வள்ளலாரின் பாடல், தமிழ் மொழியில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்களுள் ஒன்று. ஆறாம் வகுப்பில் இறை வணக்கத்திற்காகத் தமிழ்ப் பாடத்தில் கற்ற இப்பாடலில், வள்ளலார், இறைவன் உறைவிடத்தை, இனிய, எளிய தமிழில் தெளிவாகக் காண்பிக்கிறார். இப்பாடலை எப்போது படித்தாலும் என் மெய் சிலிர்த்து, கண்களில் நீர் பெருகும்.

பிற உயிர்களிடத்து அன்பு செலுத்தும் மனிதம், உலகெங்கும் தோன்றிய அதிசிறந்த சிந்தனையாளர்களால் அறிவுறுத்தப்பட்டாலும் (உ.ம். லியோ டால்ஸ்ட்டாய், ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன், பெர்னார்ட் ஷா, ரொமெய்ன் ரோலாண்ட், ...), நம் நாட்டின் சான்றோர்களின் பங்களிப்பு தனித்துவமான சிறப்பு மிக்கது. கொல்லாமைக்கும் ஊன் உண்ணாமைக்கும் அதிகாரங்கள் வகுத்த வள்ளுவர், அன்பும் இறையும் ஒன்றென உணர்த்திய திருமூலர், கருணையை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியலைத் தோற்றுவித்த மகாவீரர், வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார், காக்கைகளையும் குருவிகளையும் தமக்கு ஒப்பாகப் போற்றிய பாரதி, சிறு புழுவிடத்தும் தமது சகோதரத்துவத்தைக் கொண்டாடிய மகாத்மா காந்தியடிகள், என மேலோர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இவர்கள், தமது எழுத்துக்களாலும், வாழ்வு முறையாலும் எண்ணற்றவர்களைத் தம் காலங்கள் கடந்தும் ஈர்க்கின்றனர்.

ஒரு நாட்டின் மாண்பையும், நேர்மையின் முன்னேற்றத்தையும் அந்நாட்டில் விலங்குகள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதைக் கொண்டு மதிப்பிடலாம் என்கிறார் காந்தியடிகள். இதன் அடிப்படையில் நோக்குகையில் இன்று இந்தியாவும், குறிப்பாகத் தமிழகமும் மிகவும் இழிவான நிலையிலுள்ளன [1]. பசுக்கள், காளைகள், கன்றுகள், எருமைகள், கோழிகள், பன்றிகள், ஆடுகள் போன்ற விலங்குகள் மாமிசத்திற்காகவும்  பாலுக்காகவும், விவரிக்க முடியாத வன்கொடுமைகளுக்குத் தமது வாழ்நாட்களில் ஆட்படுத்தப்படுகின்றனர் [3,4]. நரகத்தை எவறேனும் காண வேண்டுமெனில், இவர்களை வளர்க்கும் அரக்கப் பண்ணைகளுக்குச் செல்லலாம். நரகத்திலிருந்து விடுதலையளிக்கும் மரணமும் இவர்களுக்கு நீண்ட வேதனைக்குப் பின்னே தான் கிடைக்கிறது.

மாமிசமும் பாலும் மனிதர்களுக்குத் தேவையா?
ஆனால், மாமிசமும் பிற விலங்குகளின் பாலும் மனிதர்களின் உடல் நலத்திற்கு சற்றும் தேவையற்றன (வேறு எந்த விலங்கும், வளர்ந்தபின் இயற்கையாகப் பாலைப் பருகுவதில்லை; அதுவும் வேறு இனத்தைச் (species) சார்ந்த விலங்குகளின் பாலை!); மேலும், இவற்றை உட்கொள்வதால், மனிதர்களை நீரழிவு, இதய, புற்று நோய் போன்றவை தாக்கும் வாய்ப்பு அதிகமாகின்றது என்பது, பல்வேறு ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது [7]. American Dietetic Association, சைவ உணவைப் பற்றிய தனது நிலைப்பாட்டில் [5], பால் உள்ளிட்ட விலங்குகள் மூலம் கிடைக்கப் பெறும் உணவுப் பொருட்கள், ஒரு மனிதனுடைய எந்தப் பருவத்திலும் தேவையற்றது எனத் தெளிவாக விளக்கியுள்ளது; மேலும் விலங்குகளாலான உணவுப் பொருட்களைத் தவிர்த்தல், பல்வேறு நோய்களிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்க உதவுகிறதெனவும் தெரிவித்துள்ளது.

முடிந்த மட்டிலும் பிற உயிர்களைத் துன்புறுத்தாது வாழ விழையும் வாழ்வு முறையை நனிசைவ வாழ்வுமுறை என்பர் [2]; இது ஆங்கிலத்தில் veganism [11] என்று வழங்கப்படுகிறது. நனிசைவர், மாமிசம், விலங்குகளின் பால், போன்றவற்றையும், விலங்குகளின் தோல், பட்டு போன்றவற்றாலான பொருட்களையும், விலங்குகளின் மீது சோதித்துப் பார்த்த பொருட்களையும் முடிந்த மட்டிலும் தவிர்ப்பர். எனினும், சோயா, கோதுமை போன்றவற்றால் செய்யப்படும் 'மாமிச' உணவுப்பொருட்கள் [8], சோயா, முந்திரி, பாதாம், நிலக்கடலை, ஓட்ஸ், தேங்காய் போன்றவற்றாலான பால், தயிர், வெண்ணெய், போன்றவற்றையும், செயற்கைப் பட்டு, தோல் ஆகியவற்றையும், விலங்குகளின் மீது சோதிக்கப்படாத பொருட்களையும் விரும்பினால் பயன்படுத்துவர். நனிசைவ உணவு முறையப் பற்றி மேலும் அறிய www.pcrm.org என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

விடுதியில் தங்கும் நம் மாணவர்களுக்கு, குறிப்பாக, நனிசைவ வாழ்வு முறையை முதன்முதலாகப் பின்பற்ற விழைபவர்க்கு, என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வாருங்கள், நிலக்கடலை தயிர் செய்யலாம்! (மூலம்: http://sharan-india.org)
1. 50 கிராம் பச்சை நிலக்கடலையை 6-8 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. கடலை ஊறியபின் நீரை வடித்து, ஒரு முறை தண்ணீரில் கழுவி, முதலில் நீரின்றி அரைக்கவும்.
3. பின்னர் 200 கிராம் தண்ணீர் விட்டு மை போன்று நன்கு அரைக்கவும்.
4. கலவையை வடிகட்டியில் வடித்து, பால் எடுத்து, சூடாக்கி 3-4 முறை பொங்க விடவும்.
5. பாலை ஆறவிட்டு, விரல் பொறுக்கும் சூடு வந்தபின், 5-10 ml starter culture சேர்த்து மூடி வைக்கவும்.
6. 8 மணி நேரம் ஆனபின் கடலைத் தயிர் தயார் (குளிர் காலத்தில் ஓரிரு மணி நேரம் அதிகமாகலாம்).
7. கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து, வெள்ளரி, உப்பு ஆகியவற்றுடன் தயிருக்குள் கலக்கவும்.

Starter Culture
1. கைப்பிடி அளவு முழு கோதுமையை கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. 24 மணி நேரம் கழிந்தபின், தண்ணீர் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறி, சற்றே புளித்த மணம் வருகிறதா என சோதிக்கவும். அவ்வாறு மாறினால், starter culture தயார்.
3. இல்லையேல், 12 மணி நேரத்திற்கு ஒருமுறை சோதிக்கவும். குளிர் காலங்களிலும், தட்பவெப்பம் குறைவாக இருந்தாலும் ஒரு நாளுக்கும் மேல் தேவைப்படலாம்.
4. விலங்கு அல்லது தாவர (நிலக்கடலை, சோயா, ஓட்ஸ், முந்திரி, பாதாம்) தயிரையும் starter culture-ஆகப் பயன்படுத்தலாம்.

Table 1: 100 கிராம் உணவுப்பொருட்களில் கால்சியத்தின் அளவு
(தகவல் மூல ஏடு: ' Nutritive Value of Indian Foods'  from National Institute of Nutrition, Hyderabad)

உணவு                                        கால்சியம் அளவு (மில்லி கிராம்)}
மாட்டுப்பால்                                           120
கேழ்வரகு                                                344
கொண்டக்கடலை                                 202
பச்சைப்பயிர்                                           124
உளுத்தம்பருப் பு                                    154
கொள்ளு                                                   287
ராஜ்மா                                                       260
அகத்திக்கீரை                                          1130
வெற்றிலை                                              230
கறிவேப்பிலை                                        830
கொத்துமல்லி                                         184
முருங்கைக்கீரை                                   440
வெந்தயக்கீரை                                       395
மணத்தக்காளிக்கீரை                           410
பொன்னாங்கண்ணி                              510
பலாக்கொட்டை                                    133
கொத்தவரை                                           130
பாதாம்பருப்பு                                          230
எள்                                                             1470

உணவு விடுதியில் எவற்றை உண்ணலாம்?
தானியங்கள் (கோதுமை, அரிசி, கேழ்வரகு, ஜோவர், ...), பருப்புகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை, அனைத்து  விடுதிகளிலும் (A, B, C) பல்வேறு வடிவங்களில் கொடுக்கப்படுகின்றன; இவற்றை நாம் விரும்பிய வரையில்  உட்கொள்ளலாம். இவற்றோடு, ஒரு விட்டமின் B12 மாத்திரை (eg. Nurokind Sublingual Tablets, Methyl Cobal Tablets) அல்லது B12 அடங்கிய tonic-ஐ (eg. Cobadex B-Complex Syrup) தினமும் உட்கொள்ளுதல் நலம். புரதங்கள் பருப்புகளில் அதிக அளவில் உள்ளன. பருப்பு வகைகளையும், தானியங்களையும் உட்கொண்டால் புரதச் சத்துக் குறைபாடே நேராது. சுண்ணாம்புச் சத்து, விலங்குப் பாலில் மட்டுமே உள்ளவாறு பால் நிறுவனங்கள் விளம்பரப்படுத்தினாலும் பருப்பு வகைகளிலும் கீரைகளிலும் சுண்ணாம்புச் சத்து பாலைக்காட்டிலும் அதிக அளவில் குவிந்துள்ளது (Table 1). உணவு விடுதிகளில் அளிக்கப்படும் அனைத்து இனிப்புகளிலும் விலங்குகளின் பாலை ஏதாவது ஒரு வடிவில் சேர்ப்பதால் (மிகச் சில விதிவிலக்குகள் மட்டும்) அவற்றைத் தவிர்ப்பது நலம்.

அறையில் செய்யக்கூடிய உணவுவகைகள்:
தினந்தோறும் சிறிய அளவில் (10 கிராம் அளவில்) எண்ணெய் வித்துக்களையும் (எள், முந்திரி, நிலக்கடலை, பாதாம், ...) உட்கொள்ளுதல் நலம். எண்ணெய் வித்துக்களப் பச்சையாக, 8 மணி நேரம் ஊற வைத்து, நீர் வடித்து ஒருமுறை கழுவி வெல்லம் சேர்த்து உண்ணலாம். பச்சைப் பயறு, கொண்டக்கடலை ஆகியவற்றை முளைக்கட்டி  பச்சையாகவோ உலர் திராட்சை, வெல்லம் சேர்த்தோ, அல்லது எலுமிச்சை, உப்பு, பச்சை மிளகாய், வெள்ளரி ஆகியவற்றைச் சேர்த்தும் உண்ணலாம். இவற்றில் புரதச் சத்து மிக அதிக அளவில் உள்ளது. மேலும் முளைக் கட்டிய பயறு வகைகளில் பல்வேறு விட்டமின்கள் குவிந்துள்ளன.

பயறுகளை முளைக் கட்ட, ஓரிரு கைப்பிடி பயறை இருமுறை நன்கு கழுவி, அவை நன்றாக மூழ்கும் அளவிற்கு நீரூற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும்; பிறகு, நீரைக் கொட்டி, ஊறிய பயறை ஒரு முறை நன்கு கழுவி, நீரை வடிக்கவும். 12 மணிக்கு ஒருமுறை பயறைக் கழுவி, நீரை வடிக்க வேண்டும். விரும்பிய அளவிற்கு முளை வந்தபின் உண்ணலாம். பயறு இருக்கும் பாத்திரத்தை, சிறிதளவு மட்டும் காற்றோட்டம் வரும் அளவிற்கு இடைவெளி விட்டு மூடி விடவும். பச்சைப் பயறு ஒரே நாளிலும், கொண்டக் கடலை 1.5-2 நாட்களிலும் முளை வரும்.

அவல் அல்லது ஓட்ஸைத் தண்ணீரில் ஊற வைத்து, தேங்காய், வெல்லம், ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றைக் கலந்துண்டால் வேறு இனிப்பே தேவையில்லை. கருப்பு பேரிச்சம் பழத்துள் பாதாம் அல்லது முந்திரியை வைத்தால் சத்தும் சுவையும் கூடிய இனிப்பு ஆயிற்று. இவற்றைத் தயாரிக்க அடுப்பு தேவையில்லை. தேங்காய்த் துருவி, வெற்றிலை, பாக்கு கொட்டும் கல் (ஏலக்காய் பொடிக்க - மல்லேஸ்வரம் 11-வது குறுக்கு வீதியில் கிடைக்கும்), கத்தி போன்றவை போதும்.

இந்தியாவைப் போல் இயற்கையால் அருளப்பட்ட நாடு இவ்வுலகில் வேறு எதுவும் இல்லையெனலாம் -   தெய்வீக சுவை கொண்ட பலா, பழங்களின் அரசனான மாம்பழம், உண்ண உண்ணத் திகட்டாத பப்பாளி, அனைவரும் விரும்பும் வாழை, இளமை கூட்டும் கொய்யா, மற்றும் நெல்லி, சப்போட்டா, திராட்சை, தர்பூசணி, அன்னாசி  முலாம்பழம் மற்றும் பல்வேறு பழவகைகள் வெவ்வேறு காலங்களில் நம் நாட்டில் விளைகின்றன. இவை  நம்மருகிலுள்ள யஷ்வந்த்பூர் மற்றும் மல்லேஸ்வரம் பகுதிகளில் கிடைக்கின்றன.பருவ காலத்திற்கேற்ற  கனிகளை சுவைக்க, சமைக்கத் தெரிந்திருக்க வேண்டியதில்லை.


வெளியில் கிடைக்கும் நனிசைவ உணவுப் பொருட்கள்:
இந்தியாவில் நனிசைவ வாழ்வுமுறையப் பின்பற்றுதல் மிகமிக எளிது. பல சைவ உணவு விடுதிகளில், விலங்குகளின் பாலால் செய்யப்பட்ட பொருட்களை மட்டும் தவிர்க்கும்படி ஊழியியர்களிடம் வேண்டுகோள் விடுத்தால் போதும். [6] தளத்தில் நனிசைவ இனிப்புகளின் பட்டியல் உள்ளது. காந்தி இனிப்புகளில் (Kanti Sweets), சில நனிசைவ இனிப்புகள் உள்ளன (அத்தி, பேரிச்சை பருப்பி, பூசணி பேதா, சில வகை லட்டுகள், ஜிலேபிகள் போன்றவை). Mama Mia, Baskin Robbins போன்ற கடைகளில் நனிசைவ பனிக்கூழ் கிடைக்கும். [9] தளத்தில் நனிசைவருக்கேற்ற உணவகங்கள், உணவுப்பொருட்கள் உட்பட்ட பயனுள்ள தகவல்கள் உள்ளன. Bionutrients என்னும் நிறுவனம் [10], சோயா பால் பொடியை குறைந்த விலையில் விற்கிறது. இப்பொடியைக் கொண்டு நாம் சோயா தயிர் செய்யலாம்.

பிற நனிசைவப் பொருட்கள்:
செயற்கைப் பட்டு, செயற்கைத் தோல் ஆகியன தற்போது பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன (உ.ம். பாட்டா (Bata) கடைகளில் செயற்கைத் தோல் காலணிகள் கிடைக்கின்றன). விக்கோ வஜ்ரதந்தி, நம்பூதிரி ஆகிய பற்பசைகள் நனிசைவருக்கேற்றன (நனிசைவருக்கு - குறிப்பாக, பெரும்பாலும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை மட்டும் உண்ணும் நனிசைவருக்கு - பற்பசைகள் தேவையில்லை; உப்பு மட்டுமே போதுமானது. தாவரங்களை மட்டும் உண்டால் செரிமானம் நன்கு அமையும், எனவே வாசனை பொருட்கள் கலந்த பற்பசைகள் தேவையில்லை). Himalaya நிறுவனத்தின் சில shampoos ('No Animal Testing' என முத்திரையிடப்பட்டிருக்கும்), மீரா சீவக்காய்ப் பொடி, அரப்பு, Medimix, Classic Cinthol, Chandrika Soap, Mysore Sandal Soap (Classic) ஆகியன விலங்குகளின் மீது சோதிக்கப்பட்டதில்லை; மேலும் அவற்றில் விலங்குகளின் உடல் பாகங்களும் இல்லை.

நனிசைவ விருந்தை சுவைக்க விருப்பமா?
பெங்களூரிலுள்ள நனிசைவர்கள், மாதம் ஒரு முறை கூடி தாம் செய்த, அல்லது வெளியில் வாங்கிய நனிசைவ உணவுப் பொருட்களையும், தம்முடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்களில் பலர், அயல் நாடுகளிலிருந்து வந்தவர்கள். எனவே இச்சந்திப்பில் விதவிதமான சுவைமிக்க உணவுப்பொருட்கள் (cakes, chocolates, பாயசம், பிற இனிப்புகள், தாவரத் தயிர், தாவரப் பால், bread, மற்றும் நமக்குப் பழக்கப்பட்ட உணவுப்பொருட்கள்) பகிர்ந்து கொள்ளப் படுகின்றன. இச்சந்திப்பில் பங்கு கொண்டு, நனிசைவ உணவுப் பொருட்களை சுவைக்க arun.rangasamy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.


By, 
அருண், முன்னாள் ஆராய்ச்சி மாணவன், Indian Institute of Science,சமபாவா (http://www.samabhava.org) அமைப்பின் பொருளாளன்

References:
[1] http://mofpi.nic.in/ContentPage.aspx?CategoryId=162

[2] http://tamilvegan.blogspot.com

[3] http://link.brightcove.com/services/player/bcpid96975757001?bctid=995397723001

[4] http://earthlings.com

[5] http://www.vrg.org/nutrition/adapaper.htm

[6] http://veganbengaluru.wordpress.com/vegan-friendly-bangalore/treats/

[7] The China Study: Starting Implications for Diet, Weight Loss and Longterm Health. T.C. Campbell and T.M. Campbel. BenBella Books, 2006.

[8] Frys Vegetarian Chicken. Available at Namdharis and other Supermarkets. www.frysvegetarian.co.za

[9] http://vegan-india.blogspot.com

[10] http://bionutrients.in

[11] http://vegansociety.com


Friends, please feel free to use this post in whatever way you can, but whenever you use it, kindly consider mentioning a few words about our NGO Samabhava, or pointing others to these links: https://www.facebook.com/Samabhava or www.samabhava.org. Thank you very much!