பால்-வெண்ணிறத்தில் ஒரு விஷம்

பால். அன்றாடம் நம் வாயில் நுழையும் அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டது.
காலை எழுந்தவுடன் காபி;
பின்பு வாயில் உருகும் நெய் தோசை
என்று பாரதியார் பாட்டு எழுதும் அளவிற்கு பால் மற்றும் பால் பொருட்கள் நம் அன்றாட வாழ்வில் கலந்துவிட்டன. தொலைக்காட்சி விளம்பரங்களும், நகைச்சுவையாய் சித்தரிக்கப்படும் கார்டூன் படங்களும் நம்மை தினம் தினம் முட்டாளாக்கி சம்பாதிக்கின்றன. செண்பகமே செண்பகமே என்று பாட்டுப் பாடி பால் கறந்து சினிமாவும் நம்மை முட்டாளாக்கிவிட்டது. உண்மையில் பால் எனும் வெண்மையான திரவத்திற்குப் பின்னால் உள்ள இருண்ட உண்மை தெரியுமா உங்களுக்கு? நாம் தெய்வமாக நினைக்கும் பசுக்கள் படும் துயரம் பற்றி அறிவீர்களா? பால் பொருட்களை தவிர்த்து வாழ்தல் உண்மையில் ஆரோக்கியம் என்பதை அறிவீர்களா? அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்.
இந்தக் கட்டுரையை எழுதும் முன் நான் பாலைப் பற்றி என்ன நினைத்திருந்தேன் என்று கூறி விடுகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் முட்டை மற்றும் பால் பொருட்களை விரும்பி சாப்பிட்டிருக்கிறேன். முட்டையில் உயிர் இல்லை என்றும் பால் கறக்காமல் விட்டால் பசு வேதனைப்படும் என்றும் எனக்கு கற்பிக்கப்பட்ட முட்டாள் தனமான கொள்கைகளைப் பேசி விதண்டாவாதம் செய்து என் தவறுகளை நியாயப்படுத்தியிருக்கிறேன். ஒரு இஸ்லாமிய அன்பர் என்னிடம் பால் சாப்பிடுவதைப் பற்றி வாதாடினார். நான் வழக்கம் போல விதண்டாவாதம் செய்து என் தவறை நியாயப்படுத்தினேன். இப்பொழுது நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. ஆனால் அவர் என்னிடம் கேட்ட கேள்விகள் என்னை சிந்திக்கச்செய்தன. பால் உண்மையில் கொடூரமானதா? பால் இல்லாமல் வாழ முடியுமா? என்ன நடக்கிறது பால் பண்ணைகளில்? பசுக்கள் துன்புறுத்தப்படுகின்றனவா? இத்தகைய கேள்விகள் என்னுள் எழுந்தன. கேள்விகளுக்கு பதில் காண முற்பட்டேன். அந்த பதில்களும், என்னை ஒரு நனிசைவனாய் மாறச் செய்த காரணங்களும் இங்கே...


அமைதியாக மென்று கொண்டிருக்கும் வாயும் நிசப்தமான கண்களும் பசுக்களை இவ்வுலகில் எந்த விதப் பற்றும் இல்லாமல் திருப்தியாய் வாழ்வது போல் காட்டிவிடும். ஆனால் அவற்றின் ஆழமான கரிய நிறக் கண்களுக்கு பின்னால் இருக்கும் சங்கதிகள் பல.
வாயில்லா ஜீவன் என்று முத்திரை குத்தப்பட்டிருக்கும் அந்தப் பசுக்கள் உண்மையில் வாயை கண்களில் கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதன் தான் அதை கவனித்துக் கேட்கத் தவறி காதில்லா ஜீவனாக வலம் வருகிறான் என்பது மிகவும் கசப்பான உண்மை. 
நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகள் போன்றே மாடுகளும் கூட ஒரு அலாதியான உயிரினம் தான். அவைகளும் தனித்தன்மை பல கொண்டு தமக்குள்ளே வெவ்வேறு விதமான குணநலன்களைப் பெற்றிருக்கின்றன. சில முரண்டு பிடிக்கும், சில கூச்சம் கொண்டு ஒதுங்கி நிற்கும். சில நட்பு பாராட்டும், சில ஆதிக்கம் செலுத்தும். சமீப காலங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் பலவும் பசுக்கள் புத்திக்கூர்மை நிறைந்தவை என்று நிரூபிக்கின்றன. பசுக்கள் தமக்குள் இனம் கண்டு பழகுவதையும், நட்பு பாராட்டுவதையும், நிகழ்ச்சிகளை நீண்ட காலம் நினைவு பாராட்டுவதையும், எதிர்காலம் பற்றி வருத்தம் கொள்வதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து நிரூபித்துள்ளார்கள். மேலும் மனிதர்களைப் போலவே வெற்றியைக் கொண்டாடும் தன்மையும், பாவனைகள் செய்து சந்தோஷங்களைப் பறிமாறிக் கொள்கின்றன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிக்கல் என்னவென்றால், அவை தோலுக்காகவும், மாமிசத்துக்காகவும் இனப்பெருக்கம் செய்யப்பட்டு கொல்லப்படுகின்றன. பிற ஜீவராசிகளைப் போன்றே அவைகளும், குடும்பத்தில் இருந்து பிரிக்கப்படுவதையும் கொல்லப்படுவதையும் விரும்புவதில்லை. அவை பிரிவின் சோகத்தை ஆழமாக உணர்கின்றன. பசுக்கள் 7 அடி உயரம் கொண்ட சுவற்றை தாண்டியும், நீந்தியும், பல மைல்கள் நடந்து சென்று தன்னிடம் இருந்து பிரிக்கப்பட்ட கன்றை சேர போராட்டங்கள் பல செய்கின்றன. ஆனால் ஆதிக்கம் செலுத்தும் மனிதன் மனிதனாக இல்லாமல் போவதால் அவை கொல்லப்படுகின்றன. பெற்ற தாய் முன்னே பிள்ளை கொல்லப்பட்டு தோலுரிக்கப்படும் அவலம் தோல் பட்டறைகளில் நடக்கிறது. மனிதத்தை உலகுக்கே எடுத்துக் கூறும் வேதங்களும் இதிகாசங்களும் நிறைந்த நம் நாடு பணத்தை நோக்கி சுழல்வதால் ஏற்பட்ட மாய வலையில் மனிதம் மறைந்து போய்விட்டது. :( 


பொய்யான படிப்பிணைகள்:

பசுக்கள் பற்றிய பல பொய்யான படிப்பினைகள் கலாச்சாரம் என்ற பெயரிலும் மதங்களின் பெயரிலும் இங்கே மனிதர்களுக்கு கற்பிக்கப் படுகின்றன. ஒரு புறம் கோயில்களில் சிலை வைத்துக் கும்பிடும் அளவிற்கு உச்சத்தில் வைக்கப்படும் பசுக்கள் மறுபுறம் வாசலில் போடும் செருப்புக்கும் கீழான நிலையில் நடத்தப்படுவது நம் நாட்டில் தான். ஆன்மிகத்தைப் பற்றிப் பேசுபவர்கள் கூட தோல் செருப்பு அணிவதையும் தோல் பைகள் வாங்குவதையும் தங்கள் செருக்கைக் காட்டும் பெருமையாக நினைக்கிறார்கள். அந்தப் படிப்பிணைகளைத் தகர்த்து எறிய இக்கட்டுரை உதவும் என நம்புகிறேன்.

1.பசுக்கள் பால் கொடுக்கும் இயந்திரங்களா?:

இல்லை. இல்லவே இல்லை. அவை அவ்வாறு சித்தரிக்கப் பட்டன. ஆனால் உண்மையில் ஒரு பெண் எதற்காக மார்பகத்தில் பால் சுரக்கிறாளோ அதே காரணத்திற்காகத்தான் பசுக்களும் பிற பாலூட்டிகளும் பால் சுரக்கின்றன. ஒரு பெண் தன் குழந்தைக்கு ஊட்டமளிக்கவே பால் சுரக்கிறாள். அது போலவே பசுக்களும் அவற்றின் குழந்தைகளின் பசி நீக்கவும் ஊட்டச்சத்து அளிக்கவும் மட்டுமே பால் சுரக்கின்றன. கரு தரித்து பிள்ளை பிறந்தால் தான் ஒரு பாலூட்டியால் பால் தர முடியும்.  எனவே பாலுக்காக பண்ணையில் வளர்க்கப்படும் பசுக்கள் ஒவ்வொரு வருடமும் பிரசவிக்கப் படுகின்றன. ஒரு பிள்ளையைப் பெற்று எடுக்கும் வலியை உணர்வது தாய் மட்டும் தான். வருடா வருடம் வன்முறையாகக் கற்பழிக்கப்பட்டு பிள்ளை பெறச்செய்தால் ஒரு பெண்ணின் வலி எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும் ஒரு பசுவின் வாழ்க்கை.

இன்று பசுக்களும் எருதுகளும் இராட்சத இயந்திரங்கள் ஓடும் தொழிற்சாலைகளில் கட்டிவைக்கப்பட்டு இயந்திரங்கள் மூலமாக பால் கறக்கப்படுகின்றன. இயந்திங்கள் அதிகப் பாலை உறிஞ்சி எடுப்பதற்கே முற்படுகின்றன. இயல்பாக சுரக்கும் பாலை விட பல மடங்கு அதிகம் பாலை கறப்பதற்கு அவை அதிக அழுத்தம் கொடுக்கின்றன. இந்த அழுத்தமானது பசுவிற்கு உயிர் போகும் வலியை உண்டு செய்கின்றன. ஆனால் நமக்கென்ன கவலை? என்று நாம் பாலை உறிஞ்சுகிறோம். மேலும் வேலை செய்யும் ஆட்கள் பெரும்பாலும் இயந்திரங்களை சரியாக கவனிப்பதில்லை. அவை சரியான நேரத்தில் நிறுத்தப்படுவதில்லை. அதனால் பால் வற்றிய பிறகும் கூட அவை மடியை விடாமல் உறிஞ்சுகின்றன. இது மிகவும் கொடிய வேதனையாகும். பெருபாலும் பாலுக்காக பண்ணையில் வளர்க்கப்படும் பசுக்கள் அத்தியாவசிய தேவைகள் கூட பூர்த்தியாகாத வகையில் மிகவும் குறுகிய இடங்களில் கட்டி வைக்கப்படுகின்றன. அவை பால் கொடுக்கும் இயந்திரங்கள் போல நடத்தப்படுவது வேதனை. அநேக பசுக்கள் தினந்தோறும் ஹார்மோன் (மரபணு) ஊசி மூலம் அதிகப் பால் கறக்க உந்தப்படுகின்றன. (இதன் காரணமாகவே பசுக்கள் பால் கறக்காமல் விட்டால் அவற்றின் மடி வீங்கிப் போகிறது இயல்பு நிலையில் கன்றுக்கு பால் ஊட்டிய பிறகு எந்த பாலூட்டிக்கும் மடியில் பால் தங்கி வீக்கம் ஏற்படாது.)  ஆக்ஸிடாக்ஸின் (OXYTOXIN-SCHEDULE H DRUG) எனப்படும் வேதிப்பொருள் பரவலாக அனைத்து பால் பண்ணைகளிலும் உபயோகிக்கப்படுகிறது. இது சட்டவிரோதமானதும் கூட. இந்த வேதிப்பொருள் அதிகப் பால் சுரப்பதற்காக உபயோகிகப்படுகிறது. ஆனால் இது பசுக்களின் அடிவயிற்றில் பிரசவ காலத்தில் ஏற்படும் வலிக்கு சமமான வேதனையை உருவாக்குகிறது. D.A.V.Health Research foundation-ன் பிரதமரான டாக்டர். R.P.பர்ஷார் என்பவரின் ஆய்வுக்கட்டுரையில் அவர் கூறுகிறார், "உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 68-83% பால் பண்ணைகள் ஆக்ஸிடாக்ஸின் ஊசியை பயன்படுத்துகின்றன. கன்று ஈன்ற பின் 6 மாதங்கள் வரை ஒரு பசு பால் சுரக்கும். ஆனால் கூடுதலாக பல மாதங்கள் செயற்கை கருத்தறிப்பு செய்யாமலே ஆக்ஸிடாக்சின் ஊசியை செலுத்துவதன் மூலம் பால் கறக்கப் படுகின்றது. இந்த ஆக்ஸிடோக்சின் என்பது கறக்கப் படும் பாலில் கலந்து வருவதால் பால் என்பது ஒரு ஆட்கொல்லி விஷமாக மாறுகிறது. தினந்தோறும் இத்தகைய பாலை உட்கொள்வதால் 55க்கும் அதிகமான வியாதிகளை நாம் உட்கொள்கிறோம் என்பது நிதர்சனமாகிறது"
 

2.செயற்கை கருத்தரிப்பு:

இந்தியா உலகின் மிக அதிகமான பால் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ளது. இதற்கு காரணம் செயற்கை கருத்தரிப்பு முறை. இம்முறையில் காளை மாட்டின் விந்தணு சேகரிக்கப்பட்டு பின் ஒரு பசுவின் இனப்பெருக்கக் குழாயினுள் செலுத்தப்படுகிறது. இது மிகவும் தேர்ந்த மருத்துவ வல்லுநர்களால் செய்யப்பட வேண்டியது. ஆனால் நம் நாட்டில் மனிதனுக்கு வைத்தியம் பார்க்கவே உண்மையான மருத்துவர்கள் குறைவு. எனவே இந்த கருத்தரிப்பு செயல்முறை உள்ளூர் ஆசாமிகளால் பாதுகாப்பற்ற முறைகளில் செய்யப்படுகிறது.
1.ஊசிகள் சுத்திகரிக்கப்படுவதில்லை.
2.ஒரே ஊசி பல முறை பல மிருகங்களுக்கு இடையே உபயோகிக்கப்படுகிறது.
3.அடிப்படை சுகாதாரத் தேவைகள் மறுக்கப்படுகிறது.
4.பசுக்கள் சித்ரவதை செய்யப்படுகின்றன.
5.கட்டி வைத்து அடிக்கப் படுகின்றன.

இந்திய பால் பண்ணைகளின் உண்மை நிலை:



  
பாரம்பரியமாக பாலுக்காக வளர்க்கப்பட்ட பசுக்கள் மற்றும் இதர கால்நடைகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்து இயற்கையான உணவு உட்கொண்டு கலாச்சாரம் மற்றும் குடும்பத்தின் அங்கமாகவும் மதிக்கப்பட்டு, அவைகளின் உணர்ச்சிகளுக்கும் மதிப்பளிக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இந்தியப் பால் பண்ணைகளின் நிலையே வேறு. பணம் எனும் மாய வலையில் சிக்கி உழல்வது மிருகங்களோ மனிதர்களோ தனிப்பட்ட முறையில் அல்ல. மொத்த பூமியும் தான். பால் கறந்து சிறுதொழில் செய்து வந்த குடும்பங்கள் அளவில் பெரிய இயந்தர தொழிற்சாலைகளால் நசுக்கப்பட்டு விட்டன. அவை லாபநோக்கில் செயல் படும் எந்திர அரக்கர்களாகவே இருக்கின்றன. அங்கே மிருகங்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு இல்லை. மனித நலன் எந்திரத்தனமாக துரு பிடித்துப் போயிருக்கிறது. கண் முன்னே துடிக்கும் பசுக்களை பற்றி கவலை படாதவர்கள் எங்கேயோ காசு கொடுத்து பால் வாங்கும் மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பற்றியா யோசிக்கப் போகிறார்கள்? அவர்களுக்கு தேவை பணம். அதை கொடுப்பவன் பாலை வாங்கினால் என்ன? நோயை வாங்கினால் அவனுக்கென்ன? பெரிய அளவில் வெளியே தெரியாத இத்தகைய உண்மைகள், மலட்டுத்தன்மை, எலும்புருக்கி நோய் போன்ற சொல்ல முடியாத வியாதிகளாய் சமூகத்தில் பரவி விட்டன. 
மூச்சுக் காற்று மூலமாக பரவும் நோய்களைக் காட்டிலும் எச்சில், பால் மற்றும் உடற்கழிவுகளால் பரவும் வியாதிகள் மிகவும் கொடியவை. பால் பொருட்களுக்கு பெருகியுள்ள தேவைகளால் பசுக்கள் வருடத்திற்கு இரண்டு முறை செயற்கையாக கருத்தரிக்கப் படுகின்றன. பிரசவ காலமோ 7 மாதங்கள். ஆனால் 3 மாதத்திற்கு ஒரு முறை ஊசி மூலம் உந்தப்பட்டு பால் கறக்கப்படுகிறது. இதனால் பிரசவமாக இருக்கும் பொழுதே பால் கறக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக பால் கறக்கப் படுவதால் மடியின் சுரக்கும் தன்மை நலிவடைகிறது. இதனால் வேதிப்பொருட்கள் மடியின் உட்புறம் அமைந்துள்ள திசுக்களை உடைத்து பாலுடன் சேர்த்து சுரக்கச்செய்கிறது. நாளடைவில் இது கீடாஸிஸ்(KETOSIS) எனும் வியாதியாக பசுவை தொற்றுகிறது. மேலும் பால் கறக்கும் இயந்திரங்களும், கைகளும், பசு நின்றுகொண்டிருக்கும் குறுகிய மேடைகளும் சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால் மாஸ்டிடிஸ்(MASTITIS) எனும் நோய் பசுக்களை மேலும் தொய்வடையச் செய்கிறது. பசுக்கள் ஹார்மோன் ஊசிகள் மூலமாக ஆயுள் நீட்டிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் இத்தகைய பசுக்களில் 20% பசுக்கள் மாமிசத்திற்காக சட்டவிரோதமாக கடத்தப் படுகின்றன. மேலும் சில பசியினாலும் சோர்வினாலும் இறக்கின்றன. 
மனித நலன் எந்திரத்தனமாக துரு பிடித்துப் போயிருக்கிறது. கண் முன்னே துடிக்கும் பசுக்களை பற்றி கவலை படாதவர்கள் எங்கேயோ காசு கொடுத்து பால் வாங்கும் மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பற்றியா யோசிக்கப் போகிறார்கள்? அவர்களுக்கு தேவை பணம். அதை கொடுப்பவன் பாலை வாங்கினால் என்ன? நோயை வாங்கினால் அவனுக்கென்ன?

இந்திய அரசின் 2003-ம் ஆண்டின் கால்நடை எண்ணிக்கை புள்ளியியல் படி இந்தியாவில் 283.1 மில்லியனன் கால்நடைகள் இருந்தன. 2007-ம் ஆண்டு 282 மில்லியன் கால்நடைகள் இருந்ததாய் அறிவிக்கப்பட்டது. 187.5 மில்லியன் பசு மற்றும் இதர கால்நடைகள், மற்றும் 97.9 மில்லியன் எருதுகள் அவற்றில் அடக்கம். ஐ.நா.வின் 2005 புள்ளிவிவரப்படி இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் இருந்தன. ஐ.நா.வின் உணவ் மற்றும் விவசாயத்துறையின் புள்ளி விவரப்படி 530,351,770 டன் பால் உலகம் முழுவதும் உட்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியா மட்டுமே அதில் 75,270,950 டன் பாலை உட்கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் 23,950,320 டன் மற்றும் வங்காளதேசம் 2,307,590 டன் பால் பொருட்களை முறையே உட்கொண்டிருக்கின்றன.  
 
மும்பை மாநகரில் 2005-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 2500-க்கும் மேற்பட்ட எருதுகள் மற்றும் பசுக்கள் தப்பிக்க வழியின்றி கட்டப்பட்டிருந்ததால் உயிரிழந்தன. பண்ணையில் வளர்க்கப்பட்ட பசுக்கள் பல கன்றுகளை தேடி அலைந்தன. ஆனால் மக்கள் கவலைப்பட்டதோ பால் விலை ஏற்றத்திற்காக மட்டுமே. :( இது பண்ணை முறை மிருகங்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் அநேக கொடுமைகளுக்கு ஒரு உதாரணம். பீட்டா, நீலச்சிலுவை சங்கம் மற்றும் இதர மிருக நல அமைப்புகள் நடத்திய ஆய்வில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 2000க்கும் மேற்பட்ட சட்ட விரோதமான பால் பண்ணைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றில் ஒவ்வொன்றிலும் தலா 2000-3500 கால்நடைகள் வரை அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இத்தகைய கால்நடைகள் ஒரு நாளுக்கு 14 கிலோ அளவிலான பால் கறக்கும் வகையில் வதைக்கப்பட்டிருக்கின்றன. 

 டெல்லி போன்ற பெருநகரங்களில் இருக்கும் பல பால் பண்ணைகள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அடிப்படை வசதி இல்லாமல் இருக்கின்றன. போதிய சுகாதார வசதிகள் இல்லை. கன்றுகள் தாயிடம் இருந்து தொலைவில் கழிவுகளுக்கு மத்தியில் கட்டிப் போடப்பட்டிருக்கின்றன.  அவைகளில் பல காசநோய், தோல் வியாதி போன்றவற்றால் அவதிப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலைகளினால் நூற்றுக்கணக்கான பசுங்கன்றுகள் மரணமடைகின்றன. அவை பிறந்து 24 மணி நேரம் கூட சரியான வாழ்வை வாழ்வதில்லை. இவ்வாறு சுகாதாரமற்ற சூழ்நிலையினால் இறக்கும் பசுக்களின் பிரேதங்கள் கசாப்புக் கடைகளுக்கு அனுப்பபடுகின்றன(இது நிச்சயம் ஹலால் அல்ல). அங்கே இவற்றின் உடல் தோலுக்காக பதனிடப்படுகின்றன. 
பசுக்கள் மனிதர்களைப் போலவே தனது குழந்தைகளை மிகவும் நேசிக்கும் பண்புடையது. அவை நமது அசுரத்தனமான பால் தேவைக்காக மீண்டும் மீண்டும் கருத்தரிக்கப் படுகின்றன. அவ்வாறு பிறக்கும் கன்றுகளும் மிகவும் சீக்கிரத்திலேயே தாயிடம் இருந்து பிரிக்கப் பட்டு தோல் பட்டறைக்காக தயார் செய்யப்படுகின்றன. இடைப்பட்ட காலத்தில், கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் பசுக்கள் தாயிடம் சேர்வதற்காக மிகவும் மெனக்கெடுகின்றன. இதனால் கயிற்றில் சிக்கி உயிரிழக்கவும் செய்கின்றன. இது ஒரு கொடுமையான மரணம் ஆகும். அவை கதறுவது அர்கில் வசிப்பவர்களுக்கு கேட்காமலிருக்க கன்றுகளின் வாய்கள் இறுகக் கட்டப்படுவது மேலும் கொடுமை. நமது அன்றாடத் தேவைக்கான பால் உற்பத்தியாகிக்கொண்டிருக்கும் வேளையில் பாலுக்கு சொந்தம் கொண்டாட வேண்டிய கன்றுகள் ஒருமூலையில் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருக்கின்றன. 


தோல் பட்டறை:



இவ்வாறு மரணமடையும் கன்றுகளின் பிரேதங்கள் வாரத்திற்கு ஒரு முறை ஒரு தோல் வியாபாரியிடம் மொத்தமாக ஒப்படைக்கப் படுகிறது. சில சமயங்களில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் கன்றுகளும் ஈவிரக்கமின்றி கொடிய முறையில் கடத்தப் படுகின்றது. அவ்வப்போது கன்றுகள் மாமிசத்திற்காகவும் கசாப்புக் கடைகளுக்கு அனுப்பப் படுகிறது. பெண் கன்றுகள்/பசுங்கன்றுகள் இதற்கு மேலும் கொடிய வாழ்க்கையை அனுபவிக்கின்றன. அவை தாய்ப் பசுவின் பால் சுரக்கும் வகையில் ஓரிரு நிமிடங்கள் பசுவின் அருகே நிறுத்தப்பட்டு பின் பால் சுரந்ததும் பிரிக்கப்படுகின்றன. இது ஒரு குழந்தையை தாய்ப்பால் குடிக்க விடாமல் செய்வதற்கு சமமான பாவமாகும். இவ்வாறு வளர்க்கப்பட்டு அதன் தாய்ப் பசு சந்தித்த கொடுமைகளை சந்திக்க அதன் இடத்தில் வைக்கப்படுகின்றது. இது ஒரு முடிவில்லா சுழற்சி முறையில் நடக்கிறது.

பிரபல பால் பொருட்கள் தயாரிப்பாளரான அமுல் (AMUL) நிறுவனம், வருடத்திற்கு 80,000 கன்றுகள் மரணத்திற்குத் தள்ளப் படுகின்றன என்று ஒப்புக் கொள்கிறது.

 
இப்படியான இழிவான மரணத்திற்குப் பின்பும் அக்கன்றுகள் பெரும்பாலும் தாய்ப் பசுவின் முன்னிலையிலேயே தோலுரிக்கப்படுகின்றன, மற்றும் கொடிய முறையில் தாக்கப்படுகின்றன என்பது கசப்பான உண்மை.



இந்தக் கொடுமைகளுக்கு முழுக் காரணமாக பண்ணை உரிமையாளர்களையோ பணியாளர்களையோ சொல்லிவிட முடியாது.  அவர்களுக்கு பால் உற்பத்தி மட்டுமே முக்கியமாகத் தெரிகிறது. ஏனென்றால் பொதுமக்கள் அவற்றை வாங்குகிறார்கள், குடிக்கிறார்கள். பசுக்களிடம் அன்பாகப் பழகி செண்பகமே செண்பகமே என்று பாட்டுப் பாடி பால் கறந்தால் இப்போதிருக்கும் அசுரத்தனமான பால் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. எனவே 80% காரணம் இத்தகைய கொடுமைகளுக்கு காசு கொடுத்து ஆதரவு தரும் மக்கள் தான். காசைக் கொடுத்து பாவத்தை விலைக்கு வாங்குவதும் ஏனோ?

கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்கள் பண்ணை மாடுகளின் உண்மை நிலையை விளக்கும்.

கன்று பிறந்து கிழே விழும்முன்னே தாய் எருது விரட்டப்படும் கொடுமை, பிஞ்சுக் கன்று முகத்தில் சங்கிலியால் கட்டப்பட்ட அவலம், சாப்பிட முற்பட்ட எருதை பணியாளர் ஒருவர் முகத்தில் அடித்து துன்புறுத்திய கொடுமை போன்றவற்றை பீட்டா நிறுவனத்தின் ஆய்வாளர்கள் நேரில் கண்டதாகக் கூறுகின்றனர். 



பசு இறைச்சி: நீங்கள் குடிக்கும் பாலின் உப உற்பத்தி




ஒரு மாடு இயற்கையாக 18-20 வயது வரை வாழும். ஆனால் இரவு பகலாக பால் கறப்பதினாலும், தொடர்ச்சியான கருத்தரிப்பினாலும் பல்வேறு நோய்களுக்கு இடமாகும் பசுக்கள் 6-7.5 வருடங்களையே வாழமுடிகிறது. இந்தியாவிலேயே சில மாநிலங்களில்(கேரளா, மஹாராஷ்ட்ரா, ) பசுக்களை சட்டரீதியாகக் கொல்லும் அனுமதி இருக்கிறது. பசுக்கள் கனரக வாகனங்கள் மூலமாகவும், தொடர்வண்டி மூலமாகவும் அத்தகைய மாநிலங்களுக்கு கடத்தப் படுகிறது. மூக்கணாங்கயிறு, மற்றும் பிற கட்டுக்கள் மூலம் அவை கொடிய முறையில் கடத்தப்படுகிறது. சில கால்நடையாகவே கடுமையான வெயிலின் ஊடே ஓரிரு தினங்களுக்கு இழுத்துச் செல்லப்படுகின்றன. அவைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு மறுக்கப்படுகின்றது. இதனால் பல மாடுகள் வழியிலேயே சோர்ந்து விழுகின்றன. அவற்றை கிளப்ப மிளகாய்த் தூள் கண்களில் அப்பப்படுகிறது. பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாயில் நெருப்பு வைக்கப்படுகிறது. பின்னர் அவை மிகவும் வன்முறையாக வண்டியில் ஏற்றப்படுகிறது. மாமிசச் சாலைக்கு வரும் முன்பே பல பசுக்கள் மரணிக்கின்றன.  கால்கள் உடைகின்றன. உயிருடன் இருக்கும் பொழுதே கொம்புகள் உடைக்கப் படுகின்றன. வால்கள் வெட்டப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு கொலையும் பிற மாடுகளுக்கு முன்பே நடத்தப் படுகின்றன.

இத்தனைக் கொடுமைகளும் நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை லாபம் எனும் பெயரில் சம்பாதிப்பதற்காகவே!!!

விலைக்கு வாங்கப்படும் வியாதிகள்

இறைச்சி, பால், தோல்... இத்தனையும் கொடுக்கும் மாடுகளையே பண்ணை உரிமையாளர்கள் மதிப்பதில்லை. சுகாதாரம் இல்லை, மருத்துவ வசதி இல்லை என ஆயிரம் இல்லை-கள். இப்படிப்பட்ட நோய் கண்ட மாடுகள் தரும் பாலையும், இறைச்சியையும் காசு கொடுத்து வாங்கும் யாரோ-ஆன உங்களின் ஆரோக்கியத்தைப்பற்றி அவர்களுக்கு என்ன கவலை இருக்கப் போகின்றது. 
ஐ.நா. சபையின் உணவு மற்றும் ஆரோக்கியத்துறையும், உலக சுகாதார அமைப்பும் 2010-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் படி பால் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பது ஆண்டொன்றிற்கு செலவிடப்படும் உலக மருத்துவ நிதியில் 73% சேமிக்கும். பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்வது 67 வெவ்வேறு விதமான வியாதிகளையும் நோய்களையும் உண்டாக்குவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான நோய்கள் சில:
1.உடல் பருமன்(OBESITY)
2.நீரிழிவு(ADULT_ONSET TYPE 2 DIABETES)
3.முதுகெலும்பு மற்றும் மூட்டு வலி(OSTEOPOROSIS)
போன்றனவாகும். 


உலக சுகாதார அமைப்பை(WHO) சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், இந்தியாவில் 33% மக்கள் பால் மற்றும் பால் பொருட்களை ஜீரணிக்க முடியாதவர்களாக(LACTOSE INTOLERANT) இருக்கிறார்கள். இதில் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் 79% பேர். இதன் மூலம் பெரும்பாலான மனிதர்களின் செரிமான இயக்கம் பால் பொருட்களில் உள்ள சக்கரை அணுக்களை செரிக்க இயலாதவையாக இருக்கின்றது. பாலில் ஈ.கோலி மற்றும் ஸ்டெஃபிலோகாக்கஸ் எனப்படும் கிருமிகள் மிகவும் எளிதாக பெருகுகின்றன. இது டையரியா, காலரா போன்ற நோய்களைப் பரப்பும். மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் தேசிய அளவில் பல்வேறு பண்ணைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பால் மாதிரிகளில் நடத்திய ஆய்வில், DDT, ஆர்செனிக், காட்மியம், மற்றும் உயிர்க்கொல்லியான பூச்சி மருந்து HCH போன்றவை அதிக அளவில் இருப்பதை உறுதி செய்தது. HCH என்பதன் அனுமதிக்கப்பட்ட உச்ச அளவு ஒரு கிலோவிற்கு 0.1 மில்லிகிராம் என்பதாகும். ஆனால் ஆய்வில் ஒரு கிலோவுக்கும் குறைவான ாளவு பாலில் 5.7 மில்லிகிராம் HCH கலந்தது தெரிய வந்தது.

தாய்ப்பால் தவிர்த்து பிற பாலூட்டிகளின் பாலை உண்டு வளரும் குழந்தைகள் நீரிழிவு நோய்க்கு வெகு எளிதில் ஆளாகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. பால் மற்றும் மிருக உடலில் இருந்து வரும் புரதம், இரண்டுமே கால்சியத்தை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடுகின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இதனால் முதுகுத்தண்டு பலகீனமாகிறது.



அதீதமான தேவை இருப்பதால், கலப்படம் என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. 
சுத்திகரிக்கப்படாத தண்ணீர் கலக்கப்பட்ட பாலுடன் மெலாமைன் எனப்படும் வேதிப் பொருட்களைக் கலப்பதால் புரத சோதனையை(PROTEIN TEST) எளிதில் தேறிவிடுகிறது பசும்பால். பால் உற்பத்தியை உண்டு பண்ணும் ஆக்ஸிடோக்சின் புற்று நோயை உண்டு பண்ணுகிறது. ஆய்வில் பணியாற்றிய விஞ்ஞானிகள் தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் "பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்ளும் மனிதர்கள் புற்றுநோய், உணவுப்பாதை அரிப்பு, மண்ணீரல் புற்றுநோய் போன்ற நோயகள் எளிதில் தாக்கும் அபாயத்தில் உள்ளனர்." என்று கூறினர்.


எனவே பால் பொருட்களை தவிர்ப்பது மிருகங்களுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கும் நலமாகும்.

சுற்றுச்சூழல் நலம் பேண:

கவிதை


சமீபத்தில் இந்த கவிதையை வாசித்தேன். குழந்தைத் தொழிலாளர் முறையையும், ஒரு தவறான படிப்பிணை சமூகத்திலும் தனி மனித வாழ்விலும் ஏற்படுத்தும் பிழைகளையும் ஒருங்கே சாடுவது போல் அமைந்த அந்த கவிதை இதோ உங்களுக்காக....
 
இறைச்சிக்கடையொன்றில்

உதவியாளனா‌‌‌க பணியாற்றும் சிறுவனுக்கு

உண்மையில் அதுதான் முத‌ல் நாள்

அதுநாள் வரை

அவனுக்கு தரப்பட்ட வேலைகள் மென்மையானவை

வெட்டப்படும் ஆடுகளின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொள்வது

மரித்துப்போன கோழிகளின் இறகுகளை உரிப்பது

வெட்டுண்ட ஆட்டுக்கால்களை இளஞ்சூட்டு நெருப்பில் வாட்டுவது

மரத்துண்டுகளை கொலைவாட்களை கழுவுவது

முதல் கொலைக்கான

உத்தரவு வந்தக் கணம்

அவன் திகைக்கிறான்

கோழிகளையும், ஆடுகளையும்

மலங்க மலங்க பார்க்கிறான்

பழுப்பும் சிவப்பும் தீற்றலுமாயிருக்கும்

மரத்துண்டை பயங்கலந்து பார்க்கிறான்

நடுங்கும் கையோடு கத்தியை தொடுகிறான்

முன்பு இந்த உலகத்தில் தோன்றி

மறைந்துபோன இறைத்தூதர்களெல்லாம்

மனக்கண்ணில் வந்து மறைகிறார்கள்

ஒரு உயிர் கோழியை தூக்குகிறான்

கண்களை மூடிக்கொள்கிறான்

எதையோ தீவிரமாக யோசிக்கிறான்

அந்தக்கோழியை விட்டுவிட்டு

இன்னொரு கோழியை தேர்வு செய்கிறான்

அதன் கழுத்தை திருக

அவனுக்கு தயக்கமாக இருக்கிறது

கத்தியால் வெட்டுவதை தேர்வு செய்கிறான்

கூடுமானவரை வெட்டவிருக்கும் கோழியின்

கண்களை பார்ப்பதை தவிர்க்கவே விரும்புகிறான்

கடவுளை தொழுகிறான்

இறைச்சிக் கடை உரிமையாளர்

அவனை பார்த்து நட்பாக புன்னகை செய்கிறார்

தாயைப் போல அறிவுரைகள் சொல்கிறார்

ஆற்றுப்படுத்துகிறார்

கொலைக்கு பிறகு அவனுக்கு அடையும்

சமூக அந்தஸ்துகளை பட்டியலிடுகிறார்

கொலை செய்வது அவன் கடமை யென்கிறார்

கொலை செய்யவே அவன் அவதாரமெடுத்தவன் யென்கிறார்

அவன் கொலை செய்யும் உயிர்கள்

துர்தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டதாய் சொல்கிறார்

பருவத்துக்கு வந்துவிட்ட

போர்வீரனாய் கர்வம் கொள்ளும்

அந்த சிறுவன்

செய்யும் முத‌ல் கொலை

மிகுந்த கொடூரமானது

ஒரு கொலைக்கு முன்னர்

அவன் எடுத்துக்கொண்ட கால அளவு

மிகுந்த நீளமானது

ஒரு கொலைக்கு முன்னர்

அவன் மனதில் விவாதித்தது

மிகுந்த தத்துவார்த்தமானது

ஒரு கொலைக்கு முன்னர்

அவன் வாழ்ந்த வாழ்க்கை

மிகுந்த சிக்கலானது

அவனுக்கு போதிக்கப்பட்ட போதனைகள்

மிகுந்த எண்ணிக்கையிலானது

அந்த சிறுவனது

மரத்திலிருந்து உதிர்ந்த

இலைகள் மீண்டும் துளிர்க்கின்றன!

இப்போதெல்லாம்,

அவன் விரல்கள்...

ஒரு புல்லாங்குழல் வாசிப்பவனாய்

ஒரு வீணைக்கருவியின் தந்தியை மீட்டுபவனாய்

ஒரு மிருதங்க கலைஞனாய்

இறைச்சியை வெட்டுவதற்கு

பழக்கமாகியிருந்தது 

 இந்த கவிதையை படிக்கும்பொழுது, ஹார்வி டைமண்ட் எனும் எழுத்தாளர் கூறிய வாசகம் நினைவுக்கு வருகிறது. அது "You put a baby, an apple and a rabbit in a crib. If the baby plays with the apple and eats the rabbit, I'll buy you a new car" அதாவது... "ஒரு குழந்தையை ஒரு ஆப்பிள் மற்றும் முயலுடன் சேர்த்து தொட்டிலில் வை. அக்குழந்தை முயலை தின்று விட்டு ஆப்பிளுடன் விளையாடினால் உனக்கு ஒரு புதிய காரை நான் இலவசமாக அளிக்கிறேன்(பந்தயமாக)" என்பதாகும்." மனிதன் எந்த விதத்திலும் மாமிசம் உண்ண ஏதுவாய் பிறந்திருக்கவில்லை. தவறான படிப்பிணைகள், சுயநலம் கொண்ட சில அறிவிலிகள் பரப்பிய தவறான கருத்துக்கள்/கொள்கைகள் போன்றவை இன்று மாமிசம் தின்னும் நரக வாழ்க்கையில் மனிதனை தள்ளியிருக்கிறது. கற்றுணருங்கள்.காலம் நெருங்கிவிட்டது. நன்மையை விதைக்க இந்நேரமும் பொன்னேரமே!


நன்றி,
காதலுடன்,
ஜானெஹ் ஷங்கர்
 

எந்த உயிரையும் கொல்லாமல் சில்லி சிக்கன் செய்வது எப்படி?

How to Make chilly chicken without killing or hurting a being?


நெஜமாவா?
.
.
.
.
.
.
.
.
.
.

நெசந்தேன்!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கிழே(!) படிங்க!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Read below,
.
.
.
.
.
.
.
.
.
.
.

You really believe in humane meat, do you? If yes, please scroll down...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
You would have never known or seen this kinda chilly chicken. Really humane.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.

இதோ, எந்த உயிரையும் கொல்லாமல் செய்த சில்லி சிக்கன்...

நீதி: கொல்லாம பிரேதப்பரிசோதனை செய்ய முடியாது. நீங்க சாப்பிடற கோழி(சிக்கன்) காதல் தோல்வியில தற்கொலை செஞ்சுகிட்டு உங்க தட்டுக்கு வரல... கொலை செய்யப்பட்டு வந்திருக்கு. கற்றுணருங்கள் தோழர்களே. நகைச்சுவையா ஏதாச்சும் எழுதலாம்னு தோனிச்சு. அதான். ஏதேனும் மனதை புண்படுத்தியிருந்தா மன்னிச்சுக்குங்க.
Moral: The chicken you eat doesn't commits suicide to visit your plate. It is killed to your taste. Learn and evolve.

நன்றி,
என்றும் காதலுடன்,


உலகப்பொதுமறை கூறும் உன்னத கருத்துக்கள்

வணக்கம். 

மீண்டும் உங்களை எனது வலைப்பூ மூலம் தரிசிப்பதில்(!) மகிழ்ச்சி கொள்கிறேன். கல்லூரி மற்றும் இதர பணிகளில் மூழ்கிப்போனதில் நேரம் கரைந்ததே தெரியவில்லை. ஒரு பெரிய இடைவேளை. இதோ மீண்டும் வந்துவிட்டேன். :) தொடர்ச்சியாக மதங்களை மட்டுமே சார்ந்து எனது பதிவுகள் அமைந்து விட்டன. அதனால் இந்த முறை மதம் சாராமல், இயற்கை உணவு முறையின் தத்துவங்களையும், நன்மைகளையும் எழுத நினைத்தேன். உலகையே இரண்டு அடியில் புகுத்திய வள்ளுவ மகான் மாமிசம் உண்பதை தவறாக சொல்லவில்லையா? என்ற கேள்வி எழுந்தது. அக்காலம் தொட்டே உலகப்பொதுமறை என பெருமை கொண்ட, பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் ஏட்டை கொஞ்சம் புரட்டினேன். அதில் சில துளிகள் இதோ.... கசடறக் கற்று, நன்மை பெறுவீர்களாக!


மகிழ்ச்சியும் சிலிர்ப்பும் சேர இதனை எழுதுகிறேன். புலான் மறுத்தல் என்று ஒரு அதிகாரத்தையே ஒதுக்கி அதை அறத்துப்பாலில் நயமாகச் சேர்க்கிறார் வள்ளுவர். 

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: புலான் மறுத்தல்
குறள் 251: 
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

பொருள்:
தன் உடம்பை வீக்குதற்பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன்;  எவ்வகையில் அருள் செய்வதாய் கருதப்படுவான்?

குறள் 252:

பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு.

பொருள்:
பொருளால் பயன் கோடல் அதனைப் பாதுகாவாதார்க்கு இல்லை; அது போல அருளால் பயன் கோடல் ஊன் தின்பவர்க்கு இல்லை.

குறள் 253:

படை கொண்டார் நெஞ்சம்போல் நன்று ஊக்காது ஒன்றன்
 உடல் சுவை உண்டார் மனம். 

பொருள்:
கொலைக் கருவியைத் தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவது அல்லது, அருளை நோக்காதவாறு போல;  பிறிதோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே நோக்குவதால்  அருளை நோக்காது.

குறள் 254:

அருள் அல்லது யாது எனில் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அவ்வூன் தினல்.

பொருள்:
அருள்யாது எனின், கொல்லாமை; அருள் அல்லது யாது எனின் கோறல் ஆகலான், அக்கோறலான் வந்த ஊனைத் தின்கை பாவம்.

குறள் 255

உண்ணாமை உள்ளது உயிர் நிலை ஊன் உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.

பொருள்:
ஒருசார் உயிர் உடம்பின்கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது;, அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின்; அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்வதற்கு அங்காவாது.

அல்லது 

(புனித)உயிர் நீத்தபின் ஒரு உடலானது நரகத்திற்குள்ளேயும் கூட அனுமதிக்கப்படாது. நரகம் கூட உயிரற்ற ஒரு உடலை ஏற்க வாயில் திறப்பதில்லை. இவ்வாறிருக்க இறந்து போன ஒரு ஊனை பார்த்து மனிதன் வாய் திறப்பதேன்?

குறள் 256:

தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலைப் பொருட்டால் ஊன் தருவார் இல்

பொருள்:
பேதைமை காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக; உலகம் கொல்லாதாயின்; பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை.

குறள் 257:
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்

பொருள்:
புலாலாவது, பிறிதோர் உடம்பின் புண்; அது தூய்து அன்மை அறிவாரைப் பெறின்; 
அதனை உண்ணாது ஒழியல் வேண்டும்.

குறள் 258:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன்

பொருள்:
மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினை உடையார்; ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார்.

குறள் 259:
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று.

பொருள்:
தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்; ஒருவிலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று.

குறள் 260:
கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.

பொருள்:
 ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா உயிரும் கை குவித்துத் தொழும்.

இதில் குறள் எண் 255 என்னை மறுபடியும் மதம் சார்ந்த கட்டுக்குள் இழுக்கிறது. இஸ்லாமிய மதத்தின் ஹலால் கொள்கையை(நரக சொர்க்கங்களின் பாதையிலினின்றும் நீக்கப்பட்ட அனைத்தும் ஹராம்) பிரதிபலிப்பது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.


நன்றி!!!
என்றும் காதலுடன்,
ஜானெஹ் ஷங்கர்.

[ஆங்கிலத்தில் படிக்க இங்கே சொடுக்கவும்]
[To read in english click here]


இந்த வலைப்பதிவு கிரியேடிவ் காமண்ஸ் வலைதள எழுத்துடைமை பாதுகாப்பு உரிமத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனை உரிய அனுமதி இல்லாமல் மறுபிரசுரம் செய்யவோ, மாற்றம் செய்யவோ கூடாது. வலைதளத்தின் பெயரில் பகிர்ந்துகொள்ளலாம்.


Please share the article by the plugins available. Post your valuable comments and rate my article. The more you share, the farther spreadeth the light.